"ஆல் ஈஸ் வெல் தட் என்ட்ஸ் வெல்" - Story by Jagannath
விமானம் சென்னை விமான நிலையத்தில் இறங்கும் என்று விமான பணிப்பெண்ணின் பன்மொழி வாக்கியங்களை கேட்டதும் ரகுவிற்கு உற்சாகம் மேலும் கூடியது. மொத்தம் இருவாரங்கள் தான் விடுமுறை. இதில் டைட் ஏஜன்டாவுடன் தன் சொந்த ஊரில் பலரையும் கண்டு திருப்தி படுத்தியாக வேண்டும். சென்றமுறை அத்தை , மாமா என்று சிலரை பார்க்காமல் ஊர் திரும்பியதால் அவர்களுக்கு வருத்தம். அத்தைக்கும் மாமாவுக்கும் தலா ஒரு பெண் உண்டென்றாலும், ரகுவிற்கு தன் வீட்டருகில் உள்ள பால்ய சினேகிதிகள் சிலர் மீதுதான் விருப்பம். அதிலும், சண்டைக்கோழி மைதிலி என்றால் ஸ்பெஷல். அதனால்தானோ என்னவோ அத்தைப் பெண் அனுவும் மாமா பெண் பாமாவும் இரண்டாம் பட்சமாகிவிட்டார்கள் ரகுவிற்கு.
ரகுவிற்கு அப்பா மட்டும்தான். கூடப்பிறந்தவர்கள் யாருமில்லை. அப்பா கொஞ்சம் கண்டிப்பு. இந்த கோபியர் கூட்டத்திலிருந்து அவனை காப்பாற்றி நன்றாக படிக்க வைத்து, கூடவே சமயல் மற்றும் வீட்டு வேலை எல்லாம் சொல்லிக் கொடுத்து ஒரு செல்ஃப் மேட் ஆக வளர்த்து, வெளிநாட்டிற்கு மேற்படிப்புக்கும் அனுப்பி மகனப் பற்றிய கவலை இல்லாமல் ஊரில் ஒண்டியாய் வாழ்ந்து கொண்டிருப்பவர். அக்கம் பக்கம் அரட்டை, திண்ணை கச்சேரி என்றில்லாமல் சமையல், பூஜை, நீயூஸ்பேப்பர், வாக்கிங் என்று இருப்பவர். ரகு வெளிநாட்டில் பட்டமேற்படிப்பு முடித்து வேலையில் சேர்ந்து தன் திறமையால் பணமும் பதவியுமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான். கோதுமை நிறமாயிருந்தாலும் நல்ல களையான முகமும் வசீகரமான தோற்றமும் உள்ளவன். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கல்யாண சந்தையில் ரேடிங் அதிகமுள்ள ஆண்மகன். கண்டிப்பாக வளர்த்தாலும் கல்யாண விஷயத்தில் மகனின் விருப்பத்திற்கும் போக்குக்கும் விட்டு கொடுப்பவர். என்ன, ஒரு விஷயத்தில் மட்டும் நோ காம்ப்ரமைஸ். ஊரை விட்டு வர முடியாது. நீயும் எனக்காக இங்கேயே இருக்க வேண்டாம். அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்படி என்று சொல்பவர். ஆனால், ரகு வரும் போதே இரண்டு தீர்மானங்களில் ஸ்ட்ராங் ஆக தீர்மானித்து விட்டான். ஒன்று மனதிற்குப் பிடித்த பெண்ணுடன் கல்யாணம். இரண்டு, மனைவி மற்றும் அப்பா இருவரையும் கூட வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வது. எக்காரணத்தைக் கொண்டும் இதில் நோ காம்ப்ரமைஸ்.
ஒரு வழியாக செக்கிங் இமிக்ரேஷன் முடித்து இரண்டு ஜம்போ பெட்டிகளுடனும் லேப்டாப் அடங்கிய பேக் பாக்குடனும் வெளியே வந்தான். இனி இங்கிருந்து கும்பகோணம் வரை செல்லவேண்டும். பஸ்ஸை விட டாக்ஸி உசிதம் என்று ஒரு ஓலாவை புக் செய்தான். சார், ஒரு பத்து நிமிஷம். வண்டி வந்துரும் என்று புக்கிங் கிளார்க் சொல்ல, அருகில் இருந்த காஃபி ஷாப்பில் ஒரு காஃபி வாங்கி, ஆஹா பேஷ் பேஷ் என்று ருசித்தவாரே ஒரு நோட்டம் விட்டான். அட, அந்த கூலிங் கிளாஸ் போட்ட பொண்ண பார்த்தா நம்ம மைதிலி மாதிரி இருக்கே என்று நினைத்துக் கொண்டவன், அவளிடம் கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் ரகுவைப் பார்த்து, டேய் ரகு, நீ எங்கடா இங்கே என்றாள். பரஸ்பரம் பேசியதன் பின் விளைவு. ரகுவுக்கு கும்பகோணம் வரை மைதிலியின் கம்பெனி. மைதிலி, ரகுவின் ஷார்ட் லிஸ்டட் பெண்களில் ஒருவர். மற்ற இருவர் கீதா மற்றும் சுதா. மைதிலி நல்ல பால் வெள்ளை. நல்ல உயரம். இந்த ஆறடியானுக்கேத்த ஆறடியாள். இன்ஜினியரிங் பட்டதாரி. வாயில் AK47 வைத்திருப்பவள். சுடச்சுட குண்டுமழை பொழியும். ஆனால் காரியத்தில் கெட்டிக்காரி. அட்ஜஸ்டிங்க் டைப். ஆனால் கொஞ்சம் மூடி. எந்த ஒரு சப்ஜெக்டிலும் டிஸ்கஷனில் இறங்கி அடிப்பாள். ரகுவும் இவளுக்கு சளைத்தவன் இல்லை. சிறு வயதில்ருந்தே வகுப்பில் இருவருக்கும் போட்டிதான். கீதா மற்றும் சுதா இருவரும் படிப்பில் சுமார். ஆனால் வீட்டு வேலை மற்றபடி வெளி வேலைகள், சங்கீதம், தையல் என்று இத்யாதிகளில் சூரர்கள். கீதா அதிகம் பேசாதவள். சுதா காரியத்திற்கு மட்டும் பேசுவாள். சீனுவாசனுக்கு தன் மகன் ரகுவிற்கு உறவில் ஒரு பெண்ணை கட்டிவைத்தால் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். சீனுவாசனுக்கு ரகுவின் நண்பிகள் மூன்று பேரையும் நன்றாகத் தெரியும். சிறு வயதிலிருந்தே நோட்ஸ் வாங்க அடிக்கடி வீட்டிற்கு வருபவர்கள். அதிலும் இந்த மைதிலி, "என்ன மாமா சாப்ட்டேளா? என்றால் சீனுவாசன் பதிலுக்கு ரகுவைத்தானே பார்க்க வந்தே. வந்த வேலையை போய் பாரு என்று அனுப்பிவிடுவார். தன் மகனையோ அல்லது உறவுக்கார பெண்களையோ அல்லது இந்த மூன்று பெண்களயோ என்றுமே சந்தேகப்பட்டது கிடையாது. ஆனாலும் ஒரு மாரல் போலீஸ்ங்க் எல்லோர் மீதும் உண்டு. சீனுவாசனுக்கு தன் மகனுக்கு பெண் உறவுக்குள்ளேயா அல்லது மகன் ஏதாவது புதுவரவுடன் வருவானா என்று ஒரு சிறு சந்தேகம். இறுதி முடிவு மகனே எடுக்கட்டும் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார். பசியுடன் வருவான் என்று மகனுக்காக சற்று கவனமாக சமைத்து வைத்திருந்தார். பொழுது இன்னும் சில நேரங்களில் சாய்ந்து விடும். ஏழு மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு விடும் பழக்கம் சீனுவாசனுக்கு. திண்னையிலே உட்கார்ந்து ரகுவின் வரவிற்காக காத்திருக்கிறார். மகன் இருக்கும் வரை சேர்ந்து சாப்பிடாலாமே என்று ஓர் ஆசை. ரகு சொகவாசி. இன்னோவா புக் செய்திருந்தான். ட்ரைவர் தனக்கு தூக்கம் வராமலிருக்க குத்துப்பாட்டை போட்டு குஷியாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தார். ரகுவிற்கு மைதிலியுடன் பேசுவதற்கு பாட்டு இடைஞ்சலாக இருக்கவே மைதிலியிடம் நான் வேணா வால்யூமை கம்மி பண்ண சொல்லட்டுமா என்றான். மைதிலி சைகையால் வேண்டாமென்று சொல்லி ட்ரைவருக்கு நாம் பேசுவது கேட்கும் என்று மெல்லிய குரலில் சொன்னாள். சொல்லியதோடு இல்லாமல் ரகுவைப் பார்த்து கண் சிமிட்டியபடியே லேசாக சிரித்தாள். அதைப் பார்த்தவுடன் ரகுவிற்கு உள்ளுக்குள் ஒரு ஜெர்க் அடித்தது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் மைதிலியிடம் அவளின் படிப்பு, வேலைப் பற்றி தெரிந்து கொண்டான். தன் பங்கிற்கு அவனுடைய அப்டேட்ஸ்களையும் கொடுத்தான்.
ட்ரைவர் மெதுவாக ரகுவிடம், சார் ப்ரேக்ஃபாஸ்ட் வேணுமா இல்லை நேரா கும்பகோணமா என்று கேட்டான். ரகு மைதிலியை பார்க்க, அவள் ஐ டோன்ட் மைன்ட். வை டோன்ட் வி ஃப்ரீ அவர் லீம்ப்ஸ் என்று கேட்டாள். ரகு, ட்ரைவரிடம், நல்ல வெஜ் ஹோட்டலா பார்த்து நிறுத்துங்க. நீங்களும் எங்களோட சாப்பிடலாம் என்றான்.
ஹை வேயில் கார் மிதந்து கொண்டிருந்தது. சட்டென்று ஒரு இடத்தில் காரை ஓரங்கட்டி, சார் வாங்க, இங்க டிஃபன் நல்லா இருக்குமென்றான். ஹோட்டலில் உள்ளே நுழைந்ததும் ரகு மைதிலியிடம் ஏசி ரூமில் உட்காரலாமென்றான். அவளோ, வேண்டாம் ரகு, இங்கே ஃப்ரெஷ் ஏர் நல்லாயிருக்கு. கூட்டமும் இல்லை. ஏசியில உக்காந்தா அரை இருட்டா இருக்கும். வெளிச்சம் போறாது. ஒரு மாதிரி ஸ்மெல் வரும். சர்விங் லேட்டாகும். இங்க தான் பெஸ்ட். ஓகேவா என்றாள். ரகு மைதிலியிடம், ஏய் நீ மாறவேயில்லை. ஏசி வேண்டாம்ன்னு சுருக்கமா சொல்லாமா அதுக்கு ஒரு கோனார் நோட்ஸ் போட்ட பாரு. அங்க நிக்கறே நீ என்றான். சரி, சரி என்ன சாப்பிடறே சொல்லு. மைதிலி, ரகுவிடம் நீ என்ன அந்த ரவா தோசை தானே. அதையே எனக்கும் சொல்லு என்றாள். மைதிலிக்கு தெரியும். விட்டா இவன் சுஜாதா சொன்ன ரவா தோச மஹாத்மியத்தை அரைமணி நேரம் கொஞ்சம் சொந்த சரக்கோட ஓட்டுவான். அடை பொங்கல் இப்படி எல்லாத்துக்கு சுஜாதாவோட சரக்க சொல்ல ஆரம்பிப்பான். ரகு ஒரு டை ஹார்ட் சுஜாதா ஃபான். மைதிலி ரகுவிடம், "ரகு சீக்ரம் சாப்பிட்டு கிளம்பலாம். நான் ஒரு நாலு மணிக்குள்ள எங்காத்துல இருக்கனும். என்ன ட்ராப் பண்ணிட்டு நீ உங்காத்துக்கு போ" என்றாள். ரகுவும் ஏன் எதற்கு என்று கேட்காமல் சரி என்றான். சாப்பிட்ட பின் மைதிலியிடம், ஆர் யூ ஓகே? இல்ல ஸ்மால் ரூம்...... என்று இழுத்தான். மைதிலி, ஐ ஆம் பர்ஃபெக்ட்லி ஃபைன் என்றாள். "சரி, வா போகலாம். ட்ரைவர் கிளம்பலாமா? என்று காரை நோக்கி நடந்தான்.
போகும் போது காரின் ஏ.சி. சுகத்தில் உண்ட களைப்பில் கொஞ்சம் தூக்கம் கண்ணை தட்டியது. மைதிலி ரகுவைப் பார்த்தாள். என்ன இவன் சீக்கிரம் வீட்டுக்குப் போகனும்னு சொன்னா என்ன விஷயம்னு கூட கண்டுகலயே. ரொம்ப மாறிட்டானே. லொட லொடன்னு பேசற ரகுவா இவன். ஒரு பர்ஃபெக்ட் ஜென்டில்மேன் போல இருக்கானே என்று நினைத்துக் கொண்டாள். மைதிலியும் சற்று கண் அயர்ந்தாள். கண்ணை மூடிய ரகுவிற்கு மனதில் ஒரு சஞ்சலம். இவளை கல்யாணம் பண்ணின்டா என்ன? கேக்கலாமா வேணாமா? ஒரு வேளை கேட்டு, குய்யோ முய்யோன்னு கத்தி கார்லேந்து குதிச்சு ஓடிட்டாள்னா? எதுவானாலும் சரி. ஊருக்கு போறதுக்குள்ளே நம்ம விருப்பத்த ஆம்பளையா லக்ஷணமா சொல்லிடனும்ன்னு மனசுக்குள்ள ஒரு ட்ரை ரன் விட்டுப் பார்த்தான்.
மைதிலிக்கும் இதே திங்கிங்தான். ஆனா ஒரு சின்ன ப்ரச்சினை. சாயங்காலம் யாரோ வெளியூரிலிருந்து பெண் பார்க்க வரான்னு சொல்லி அடிதடியா பாம்பேயிலிருந்து ஃப்ளைட் பிடிச்சு வரச் சொன்னாரே. அப்பாகிட்ட ரகுவை கேட்டுப் பாக்கலாம்ன்னு எப்படி சொல்றது? காலையில் ஏர் போர்ட்ல ரகுவை பார்க்கற வரைக்கும், ரகு நம்ம எபிஸோட்லியே இல்லையே. திடீர்னு நுழைஞ்சான். ஒரு ஈர்ப்ப கொடுத்துட்டானே. என்ன செய்யலாம் என்று யோசிக்கலானாள்.
ரகு, எதுக்கும் நாம ஒரு அப்ளிகேஷன போட்டு வைக்கலாம்ன்னு மைதிலியிடம், "மைதிலி, ஐ ஆம் கம்மிங் ஸ்ட்ரெய்ட். டு யூ லைக் மீ? ஐ லைக் யூ. ஆர் யு ஓகே டு....... " என்று அவளைப் பார்த்தான். மைதிலி ஒரு சிறிய புன்னகையுடன், " ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் ஸர்வ்ட்" என்று கண் சிமிட்டினாள். ரகு புரியாதவனாக "அப்படின்னா நான் ஃபர்ஸ்ட்டா அல்ல செகண்டா?" என்றான். மைதிலி ரகுவிடம், "டோண்ட் வர்ரி. நாளைக்கு உங்க அப்பாவோட எங்காத்துக்கு வா. R.A.C. கன்ஃபர்ம் ஆகுமான்னு பார்ப்போம்" என்றாள். ரகுவிற்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் கும்பகோணம் வந்து விட்டது. முதலில் மைதிலியை இறக்கி விட்டு, "ஸீ யு டு மாரோ" என்றான். "ஸ்யூர், டோண்ட் மிஸ் டு விசிட்" என்று சிரித்து கை அசைத்து வீட்டினுள்ளே சென்றாள்.
காரைப் பார்த்ததும் சீனுவாசனுக்கு ஒரே சந்தோஷம். வாப்பா ரகு என்று ஒரு பெட்டியை எடுக்க முற்பட்டார். "அப்பா, நீங்க எடுக்காதீங்க. கொஞ்சம் ஹெவி " என்று சொல்லி ட்ரைவரிடம் உள்ளே வைக்க உதுவுமாறு கேட்டான். பெட்டிகளை வைத்து ட்ரைவரை செட்டில் செய்து அனுப்பி இருவரும் உள்ளே வந்தமர்ந்தனர்.
"அப்பா, நான் குளிச்சு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிடறேன். அதுக்கப்புறம் வெளியே போய் சாப்பிடாலாம்" "ரகு, வெளிய வேண்டாம். நானே சமச்சு வச்சுருக்கேன். நீ மெதுவா வா. சேர்ந்து சாப்பிடலாம்" தந்தையும் மகனும் சாப்பிடும் போது பரஸ்பரம் விசாரித்துக் கொண்டார்கள்.
சாப்பாடு கடை முடிந்ததும், தந்தைக்கும் மகனுக்கும் ஒரு சிறிய தயக்கம். எல்லாம் கல்யாண விஷயம் தான். ரகு, "அப்பா" என்று சொல்லவும் ஒரே நேரத்தில், அவர், "ரகு" என்று சொல்லவும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, "பஹ்லே தும், பஹ்லே தும்" என்று பாபி சினிமா பாட்டு ரேஞ்சுக்கு நீயா நானா என்று, கடைசியில் அப்பா, ரகுவிடம், "ஒன் கல்யாணத்தை பத்தி பேசணும்.நானா ஒரு பொண்ண பத்தி சொல்லி அது ஒனக்கு பிடிக்காம எங்கிட்ட சொல்ல சங்கடப்படவேண்டாம். உன் மனசுல யாரும் இருந்தா சொல்லு" என்றார். "அப்பா, அது வந்து...." என்று மைதிலியை பார்த்ததிலிருந்து அவளிடம் தன் விருப்பத்தை சொல்லியது, அவளை வீட்டில் விட்டது வரை சொன்னான். அவரும் கேட்டுவிட்டு, "ஆமா, அவ ஒன்கிட்ட இன்னிக்கு அவள பொண்ணு பார்க்க வெளியூரிலிருந்து வராங்ககிற விவரத்தை ஒன் கிட்ட சொன்னாளோ?" என்று கேட்டார். ரகுவிற்கு குப்பென்று வியர்த்தது. மெல்ல அவள் சொன்ன ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் ஸர்வ்ட் பத்தி அப்பாகிட்ட சொல்லி, "ஆனா நாளைக்கு உங்கள கூட்டிண்டு அவாத்துக்கு வரச் சொல்லியிருக்கா. அப்பா. கொஞ்சம் நாளைக்கு நாம ஒரு நடை போய் பார்த்துரலாமே" என்றான். தன் மகனை இந்தப் பெண் இரண்டாம் பட்சமாக நினைக்கிறாளோ என்று அவருக்கும் சந்தேகம். எப்படியும் விடிந்தால் தெரியப் போகிறது என்றவாறு தூங்கப் போய்விட்டார். ரகுவிற்கோ ராத்துக்கம் போச்சு. சே. என்ன நாம இப்படி ஆயிட்டோம். நேத்து வரை ஊருக்கு வறோம்ங்கற சந்தோஷத்த தவிற வேற எதுவும் இல்லை. மைதிலியை பார்த்தததுக்கப்புறம் நிலமை மாறிடுத்தே. அதுவும் இவ ஒரு ஜெர்க் குடுத்துட்டுப் போய்ட்டாளே. சரி. நாளைக்கு என்ன தான் நடக்கும்ன்னு பார்ப்போம். மைதிலி சொன்ன மாதிரி நாமும் நம்ம உறவுப் பொண்ணுங்களை R.A.Cல தானே வச்சிருக்கோம். ஸோ. ஆல் ஈஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார் என்று நினைத்தவனாக, லேப்டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்தான். ஜெட் லாக் ஒரு பக்கம், ஆன்க்ஸைட்டி மறுபக்கம். வேலை ஓடவில்லை. சரி. ஈமெயில் மட்டும் பார்த்துவிட்டு தூங்கலாம் என்று மெயிலை நோண்டிக் கொண்டிருந்தான். எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. காலை கண் விழித்த போது ஒன்பது மணி. உடனே எழுந்து காலைக் கடனை முடித்து குளித்து ரெடியானான். அப்பா, அவனிடம், "என்ன ரகு, நல்லா தூங்கினியா? "இல்லப்பா. தூக்கத்தை தேடினேன். காணோம்" என்றான் சிரித்தவனாக. "என்னப்பா, ஒரு நடை போய்ட்டு வந்துருவோமா? " ரகுவுக்கு அவசரம். டென்ஷன் வேறு. "எங்கடா? என்றார் சீனுவாசன். " அதாம்ப்பா, மைதிலி வீட்டுக்கு... நேத்தே சொன்னேனே. உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்ப்பா. போகவேண்டாம்." "இல்லைடா, ரகு. அந்தப் பொண்னு உன்னை அலட்சியப்படுத்தறா மாதிரி தெரியுது. கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாமா?" எதுக்கும் உன் ஃப்ரண்ட் அப்புவ கேட்டுப் பாறேன். அங்க என்ன நிலவரம்ன்னு. அவாத்துக்கு பக்கத்து ஆம்ல தானே அப்பு இருக்கான்." அப்பாவுக்கு கவுரவம். ரகுவுக்கு கலவரம். இதுல அப்பு வேற உள்ளே பூந்தா, சும்மா ஒரு கை எரி குண்டை ரண்டு பக்கமும் வீசுவானே. என்ன செய்யலாம் என்று யோசனையில் மூழ்கினான். திடீரென்று ரகுவுக்கு ஒரு யோசனை. இந்த கவுரவத்தையும் கலவரத்தையும் செஸ் ஆட்டத்துல 'காஸ்லிங்' பண்ற மாதிரி இடம் மாத்திவிட்டா? குட் ஐடியா என்று தனக்குத் தானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொண்டு அப்பாவிடம், "அப்பா, எனக்கு இந்த அத்தை மாமா பொண்ணுங்கள் வேண்டாம். கூடப் படிச்ச சுதா, அனுவும் திருப்தியா இல்லை. அதுவும் இல்லாம, அவங்க யாரும் ஒரு அவசரத்துக்கு எவ்வளவு தூரம் உங்கள பார்த்துப்பான்னு தெரியல. எல்லாம் கல்யாணம் ஆகிற வரை தான். அப்புறம், சொந்தம்ன்னாலே கவுரவம் போயிடும். அதனால மைதிலி செட் ஆவாளான்னு பார்ப்போம். இல்லைன்னா, எனக்கு கல்யாணமே வேணாம். அப்பா, உங்கள பார்த்தாச்சு. நீங்க எங்கூட வந்துருங்க. நம்ம ரெண்டு பேரும் ஹாப்பியா இருப்போம். உங்க கவுரத்துக்கு டாமேஜ் ஆக விடமாட்டேன்." கலவரத்த அப்பா பக்கம் மாத்தினான். கவுரவத்த சும்மா தன் பக்கம் இழுத்தான்.
" அது இல்லடா ரகு, மைதிலி நல்ல பொண்ணுதான். நீ அவசரப்படாதே. நீ சொல்றது சரிதான். மைதிலி அளவுக்கு மத்த பொண்களுக்கு பொறுப்பும் அக்கரையும் கிடையாது. ஏதோ, சொந்தம் விட்டுப் போயிடக்கூடாதுன்னு தான் பார்த்தேன். மத்தபடி, மைதிலி தான் ஒனக்கு ஏத்த பெண்ணு. சரி, வா. நாமளே நேரா அவாத்துக்குப் போயி கேட்டுருவோம்." அப்பாவும் மகனும் மைதிலி வீட்டு வாசலில் சற்று நின்றனர். உள்ளே நடக்கும் விவாதம்தான், இவர்கள் 'என்ட்ரீக்கு ப்ரேக்' போட்டது.
மைதிலி தன் பெற்றோரிடம் கடைசியாக சொன்னதை மட்டும் நாம் கேட்டால் போதும். நமக்கு 'எண்ட் ரிசல்ட்' தான் முக்கியம்.
'மணந்தால் மகாதேவன். இல்லையேல் மரண தேவன்' என்று மைதிலி தன் பெற்றோரை மிரட்ட, ரகுவும் அவன் அப்பாவும் மைதிலி வீட்டின் உள்ளே நுழைய, ……அப்புறமென்ன, 'சிங்கிள் டிக்கட்ல' வந்த ரகு, அப்பா, மைதிலி சகிதம் மூன்று டிக்கட்களுடன், வெளிநாடு புறப்பட்டான். "ஆல் ஈஸ் வெல் தட் என்ட்ஸ் வெல்".